செய்திகள்
கைது

நாகை அருகே காவலாளியை தாக்கிய 2 பேர் கைது

Published On 2019-07-12 11:15 GMT   |   Update On 2019-07-12 11:15 GMT
நாகை அருகே காவலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகையை அடுத்த வேளாங்கண்ணி சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவர் வடக்கு பால்பண்ணைசேரியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தொழில் பயிற்சி நிலையத்தின் முன்பு அமர்ந்து 2 பேர் மது குடித்து உள்ளனர். இதை பார்த்து ராஜேந்திரன் கண்டித்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் ராஜேந்திரனை கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் நாகை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். இதுபற்றி ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அவரை தாக்கிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த மணிபாரதி (21), பிரவீன் (20) என்று தெரியவந்தது.

Tags:    

Similar News