செய்திகள்
போலீஸ் விசாரணை

மதுரையில் ரவுடி கொலை - குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீஸ் தீவிரம்

Published On 2019-07-02 15:03 GMT   |   Update On 2019-07-02 15:03 GMT
மதுரையில் ரவுடியை கொன்ற குற்றவாளிகள் தொடர்பாக தனிப்படை போலீசார் சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் மூலம் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை திருப்பாலை விஸ்வநாத தாஸ்நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் செல்லூர் எஸ்.எம்.நகர் வடக்கு கால்வாயில் நேற்று மதியம் தலை நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொத்தனார் வேலை பார்த்து வந்த சதீஷ்குமார் மீது செல்லூர், தல்லாகுளம் போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் செல்லூரில் இருக்கும் நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக வீட்டிலிருந்து சென்ற சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.

சதீஷ்குமாருக்கு செல்லூரில் பலருடன் ஏற்கனவே முன் விரோதம் இருந்தது. அதன் காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது.

இதுகுறித்து விசாரிக்க செல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
Tags:    

Similar News