செய்திகள்

திருமணம் முடிந்த 12 நாளில் மோட்டார்சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலி

Published On 2019-06-25 06:29 GMT   |   Update On 2019-06-25 06:29 GMT
மறைமலைநகர் அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் திருமணம் முடிந்து 12 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டு:

படப்பையை அடுத்த மணிமங்களம் அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் பாலாஜி விஸ்வநாதன் (வயது23). இவர் அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வந்தார்.

இவருக்கும், கீழக்கரணையை சேர்ந்த சிவரஞ்சனிக்கும் கடந்த 12 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை பாலாஜி விஸ்வநாதன் மறைமலைநகர் அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருகே தனியார் பெட்ரோல் பங்க் சர்வீஸ் ரோட்டில் மறைமலைநகர் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மறைமலைநகரில் இருந்து செங்கல்பட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு மேட்டுத்தெருவைச் சேர்ந்த தினேஷ் (19) என்பவர் வந்தார். எதிர்பாராதவிதமாக 2 மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் வேகமாக மோதிக்கொண்டன.

இதில் ஆபத்தான நிலையில் பாலாஜி விஸ்வநாதனை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதே போல் பலத்த காயம் அடைந்த தினேஷ் ஆபத்தான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News