ஆம்பூர் அருகே மது போதையில் விவசாயியை தாக்கி வாழை மரங்களை வெட்டி சாய்த்த கும்பல்
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே உள்ள கதவாளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாட்டை சாரதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் திருவிழா வெகு விமர்சியாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த திங்கள் கிழமை தொடங்கியது. திருவிழாவிற்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அம்மனை தரிசிக்க வருகை தந்தனர்.
கோவில் அருகில் கோவிந்தசாமி (64) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் அவரது மனைவி சகுந்தலாவுடன் வசித்து வந்தார். தங்கள் நிலத்தில் கரும்பு, வாழை பயிரிட்டு பராமரித்து வந்தார்.
இந்த நிலையில் கோவில் விழாவிற்கு வந்த ஒரு கும்பல் கோவிந்தசாமி வாழை தோட்டத்தில் உட்கார்ந்து மது குடித்து கொண்டிருந்தனர்.
இதனை கண்ட கோவிந்த ராஜ், அவரது மனைவி சகுந்தலாவும் அவர்களை வெளியேறுமாறு கூறினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் இருவரையும் தாக்கினர். மேலும் வீட்டை சூறையாடியும், விவசாய நிலத்தில் இருந்த வாழை மரங்களை வெட்டி சாய்த்து விட்டும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து உமராபாத் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.