செய்திகள்

துக்க வீட்டில் வாலிபர் அடித்து கொலை- திருப்பத்தூர் ஆஸ்பத்திரி முற்றுகை

Published On 2019-06-19 11:33 GMT   |   Update On 2019-06-19 11:33 GMT
திருப்பத்தூரில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டதால் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

திருப்பத்தூர்:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கருப்பனூரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் பிரசாந்த் (வயது 21). அரசு காண்ட்ராக்ட் மூலம் கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இன்று அதிகாலை திருப்பத்தூர் பஸ்நிலையம் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் ஒருவர் இறந்துவிட்டார். இதனால் இறந்தவரின் உறவினர்கள் சாலையில் சேர் போட்டு உட்கார்ந்து இருந்தனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற பிரசாந்த் உட்கார்ந்து இருந்தவர்கள் மீது பைக்கில் மோதியதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கிருந்தவர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்களில் 7 பேர் கொண்ட கும்பல் பிரசாந்த்தை சரமாரியாக தாக்கினர். இதில் பிரசாந்த் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். பிரசாந்தை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.


பிரசாந்தின் பிணம் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தை மாவட்ட தலைவர் சுபாஷ்சந்திர போஸ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.

திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனி தலைமையில் ஆஸ்பத்திரி முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News