அரியலூர் அருகே விசாரணைக்கு சென்ற போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் - தந்தை-மகன் கைது
அரியலூர்:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் ஒரு மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த மோசடி வழக்கு சம்பந்தமாக அரியலூர் மாவட்டம் வெங்கனூரை சேர்ந்த அமிர்தராஜ் (வயது 42) என்பவரிடம் விசாரிக்க திருவெறும்பூர் போலீஸ்காரர்கள் மணி, வசந்தகுமார், இன்பமணிஆகியோர் வெங்கனூருக்கு சென்றனர்.
அப்போது அமிர்தராஜ் அங்குள்ள டாஸ்மாக்கடை அருகே இருப்பது தெரிய வந்தது. உடனே 3 போலீஸ்காரர்களும் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் அமிர்தராஜ் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் விரட்டி சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அமிர்தராஜ் மகன் வினித் (21) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். இதையடுத்து தந்தை-மகன் 2 பேரும் சேர்ந்து பீர் பாட்டிலை உடைத்து 3 போலீஸ்காரர்களையும் தாக்கினர். இதில் 3 பேருக்கும் பாட்டில் குத்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்த அவர்கள் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து போலீஸ்காரர் மணி வெங்கனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் வழக்குப் பதிவு செய்து அமிர்தராஜ், வினித் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.