செய்திகள்

அமைந்தகரையில் ரூ. 10 லட்சம் கடன் தகராறில் பெண் கடத்தல்

Published On 2019-05-26 14:02 GMT   |   Update On 2019-05-26 14:02 GMT
அமைந்தகரையில் ரூ. 10 லட்சம் கடன் தகராறில் பெண்ணை கடத்தி வீட்டில் அடைத்து வைத்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போரூர்:

கீழ்ப்பாக்கம், டெய்லர்ஸ் சாலை திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கவுதமன். இவரது மனைவி திலகவேணி. இவர் அமைந்தகரை இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

நான் தற்போது வசித்து வரும் வீட்டை கடந்த 2012-ம் ஆண்டு சகாயராணி என்பவரிடம் இருந்து ரூ. 50 லட்சம் விலை பேசி ரூ. 35 லட்சம் பணம் செலுத்தி வீட்டை கிரையம் செய்து கொண்டேன்.

மீதமுள்ள தொகை ரூ. 15 லடசத்தை 2 வருட தவணையாக தருவதாக அவரிடம் ஓப்பந்தம் போட்டுக் கொண்டேன். அதில் சிறுக, சிறுக ரூ, 5 லட்சம் பணத்தை திருப்பி செலுத்திவிட்டேன். மீதம் உள்ள ரூ. 10 லட் சத்தை கொடுக்க வேண்டி இருந்தது.

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி மதியம் என்னை தொடர்பு கொண்ட சகாயராணியின் கணவர் தாஸ் நேரில் பேச வேண்டும் என்று கூறி அழைத்ததன் பேரில் அமைந்தகரை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வணிக வளாகம் அருகே நான் சென்றேன்.

அப்போது அங்கு வந்த தாஸ் மற்றும் அவருடன் இருந்தவர்கள் என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சரமாரியாக தாக்கினர்.

பின்னர் ஈ.சிஆர். சாலையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து உடனடியாக ரூ. 10 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டு மேலும் தாக்கினர்.

அங்கிருந்து தப்பிய நான் ராயப்பேட்டை அரசு மருத் துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினேன். என்னை கடத்தி சென்று தாக்கிய தாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த வணிக வளாகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News