செய்துங்கநல்லூர் அருகே வாலிபரை அரிவாளால் சரமாரி வெட்டிக்கொன்ற 4 பேர் கைது
செய்துங்கநல்லூர்:
செய்துங்கநல்லூர் அருகே உள்ள தெற்குகாரசேரியை சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் தங்கபாண்டி (வயது 27). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த தொழிலாளியான ராமசுப்பிரமணியனுக்கும் முன்விரோதம் உள்ளது. தங்கபாண்டியின் உறவினர் பெண்ணை கேலி செய்ததாக ராமசுப்பிரமணியனை, தங்கபாண்டி எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில் தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா செய்வதிலும் இவர்கள் இருவருக்குள் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 23-ந் தேதி தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தெற்கு காரசேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அவர் வல்லகுளம் சாஸ்தா கோவில் விலக்கு அருகே வந்த போது ராமசுப்பிரமணியன் தனது நண்பர்களான சுந்தரம், முருகன், ஊய்க்காட்டான் ஆகியோருடன் சேர்ந்து அவரை வழி மறித்து சராமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து சேரகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரம், முருகன், ஊய்க்காட்டான் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கொலையில் முக்கிய குற்றவாளியான ராமசுப்பிரமணியனை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் ராமசுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர்.
கைதான ராமசுப்பிரமணியன் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-
எனக்கும், தங்கப்பாண்டியனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து பல இடங்களில் நாங்கள் சந்திக்கும் போது அவர் என்னை முறைத்து கொண்டு வாக்குவாதம் செய்து வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்கு எனது நண்பர்கள் சுந்தரம், முருகன், ஊய்க்காட்டான் ஆகியோரை சேர்த்துக் கொண்டேன்.
இதையடுத்து தங்கபாண்டியை கண்காணித்து வந்தோம். சம்பவத்தன்று அவர் தனியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இதை சாதகமாக்கி கொண்டு நாங்கள் அரிவாளால் அவரை சரமாரி வெட்டி கொன்று விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம். ஆனால் போலீசார் எங்களை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட தங்கப்பாண்டி மீது சேரகுளம் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.