செய்திகள்
அன்னூர் அருகே பேக்கரி உரிமையாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு
அன்னூர் அருகே பேக்கரி உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
அன்னூர் அருகே உள்ள சானாம்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜன் (50). பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 20-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான திருப்பத்தூருக்கு சென்றார். நேற்று காலை வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த நாகராஜன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ. 65 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து நாகராஜன் அன்னூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.