செய்திகள்

தே.ஜ.கூட்டணி தலைவர்களுக்கு நாளை அமித் ஷா விருந்து - இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். பங்கேற்பு

Published On 2019-05-20 12:48 GMT   |   Update On 2019-05-20 12:48 GMT
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்களுக்கு டெல்லியில் நாளை பாஜக தலைவர் அமித் ஷா ஏற்பாடு செய்துள்ள விருந்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகளின்படி, மத்தியில் ஆளும் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா நாளை இரவு 7 மணியளவில் டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் விருந்து அளிக்கிறார்.



பிரதமர் மோடி மற்றும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்சி தலைவர்கள் பங்கேற்கும் இந்த விருந்தில் கலந்துகொள்ள வருமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தேசிய முற்போக்கு திராவிட கழகம் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், ஜி.கே.வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, பெஸ்ட் ராமசாமி, நடிகர் சரத்குமார், டாக்டர் வே.தேவநாதன் யாதவ், ஜான் பாண்டியன், பூவை.ஜெகன் மூர்த்தி உள்ளிட்டவர்களுக்கு அமித்ஷா சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
Tags:    

Similar News