எரியோடு அருகே பட்டதாரி வாலிபர் மின்சாரம் தாக்கி பலி - உறவினர்கள் மறியல்
எரியோடு:
திண்டுக்கல் அருகே உள்ள எரியோடு பகுதியை அடுத்த கோவிலூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டில் நேற்று வயரிங் பணிகள் நடைபெற்றன. இந்த பணியில் குறிக்கோடாங்கி பட்டியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் மாணிக்கம் (வயது 29) என்பவர் ஈடுபட்டு இருந்தார்.
இரவு மாணிக்கம் வேலை செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இன்று காலை வீட்டை பார்க்க சென்ற தங்கவேல், மாணிக்கம் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது பற்றி எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் டி.எஸ்.பி. சிவக்குமார், எரியோடு இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணிக்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மின்சாரம் தாக்கி மாணிக்கம் பலியானது குறித்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் குறிக்கோடாங்கி பட்டி பொதுமக்கள் திரண்டனர்.
இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல்- கரூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்கள். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் சிறிது நேரம் அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது.