செய்திகள்
ஊத்தங்கரை அருகே வாலிபரை கொலை செய்த வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வாலிபரை கொலை செய்த வழக்கில் தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா 22-ந்தேதி நடைபெற்றது. இந்த விழாவையொட்டி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது அதே பகுதியை சேர்ந்தவர் பரசுராமன், அவரது மனைவி மேகலா மற்றும் உறவினர்களுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜிம் மோகன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் பரசுராமன், அவரது மனைவி மேகலா உள்பட 5 பேரையும் ஜிம் மோகன் தரப்பினர் அரிவாளால் வெட்டினார். இதில் பரசுராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சாமல்பட்டி போலீசார் 19 பேர் மீது வழக்குபதிவு செய்து ஜிம் மோகன் (37), வெற்றிவேல் (25), வேடியப்பன் (45) உள்பட 16 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை தொடர்பாக தலைமறைவான வரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
ஓசூரில் பதுங்கி இருந்த சித்திரைபாண்டியன் என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு சேலம் சிறையில் அடைத்தனர்.