செய்திகள்

ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விரக்தியில் மீனவர் தற்கொலை

Published On 2019-05-15 14:18 GMT   |   Update On 2019-05-15 14:18 GMT
புதுவையில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விரக்தியில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை கூனிமேடு குப்பத்தை சேர்ந்தவர் பழனி. மீனவர். இவரது மனைவி அஞ்சனா (வயது 48). இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் இருந்தனர்.

மூத்த மகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். 2-வது மகன் ராஜசங்கர் (வயது 23). மகள் 3 ஆண்டுகளுக்கு முன்னர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே பழனி அப்பகுதியில் சீட்டு பிடித்து வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பி தர முடியாமல் போனது. ஊர் பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றது. ஊர் பஞ்சாயத்தார் பழனி குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் நல்லவாடு உள்ளிட்ட சில மீனவ கிராமங்களுக்கு சென்றபோது அவர்களும் ஊருக்குள் இவர்களை அனுமதிக்கவில்லை.

இதனையடுத்து அஞ்சனா தனது மகன் ராஜசங்கருடன் முதலியார்பேட்டை கருமார வீதியில் வாடகை வீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குடியேறினார். ராஜசங்கருக்கு மீன்பிடி தொழிலை தவிர வேறு எதுவும் தெரியாத காரணத்தினால் வீட்டிலேயே இருந்து வந்தார். அஞ்சனா மீன் விற்று குடும்பத்தை நடத்தி வந்தார். தான் வேலைக்கு செல்லாமல் தாய் வேலைக்கு செல்வதால் ராஜசங்கர் மிகவும் மனவேதனையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அஞ்சனா மூத்த மகனுக்கு பெண் பார்க்க பூம்புகார் சென்றிருந்தார். இரவு அங்கு தங்கிவிட்டு, மறுநாள் காலை வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீடு பூட்டாமல் மூடப்பட்டிருந்தது. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜசங்கர் தூக்குபோட்டு பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதனை கண்ட அஞ்சனா கதறி அழுதார்.

இது குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News