நாகூர் அருகே வாகனம் மோதி காவலாளி பலி
நாகப்பட்டினம்:
நாகூரை அடுத்த பாலக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் வீரமணி (வயது 55). இவர் நாகூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீன்வளத்துறை பல்கலைகழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். வீரமணி கடந்த 12-ம் தேதி இரவு வீட்டில் இருந்து வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போதுகிழக்கு கடற்கரை சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனே சென்று காயமடைந்த வீரமணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வீரமணி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.