செய்திகள்

தேவகோட்டையில் குளத்தில் மூழ்கி 5-ம் வகுப்பு மாணவன் மரணம்

Published On 2019-05-13 09:39 GMT   |   Update On 2019-05-13 09:39 GMT
தேவகோட்டையில் தந்தை கண் முன்பு மகன் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தேவகோட்டை:

தேவகோட்டை அருகே உள்ள பனந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் ஈஸ்வரன் (வயது 10). தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

மலேசியாவில் வேலை பார்த்து வந்த சுந்தரம் சமீபத்தில் ஊருக்கு திரும்பினார். தேவகோட்டை நாச்சியாபுரத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். அந்தப்பணிகளை இன்று காலை சுந்தரம் பார்வையிட வந்தார். அவருடன் மகன் ஈஸ்வரனும் வந்தான்.

புதிய கட்டிடத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு மகனை அழைத்துக் கொண்டு உடப்பம்பட்டி ஊரணிக்கு சுந்தரம் சென்றார். ஊரணி கரையில் மோட்டார் சைக்கிளை சுந்தரம் நிறுத்தியபோது, ஈஸ்வரன் முதலில் இறங்கி வேகமாக ஊரணிக்குள் இறங்கினான்.

எதிர்பாராத விதமாக அவன் சேற்றில் சிக்கினான். அதில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தான். இதனை கவனித்த சுந்தரம், மகனை காப்பாற்ற முயன்றார்.

அதற்குள் தண்ணீரில் மூழ்கிய ஈஸ்வரன் மூச்சுத்திணறி இறந்தான். தேவகோட்டை தாலுகா போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News