செய்திகள்
கூடுவாஞ்சேரி அருகே விபத்து - ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பலி
கூடுவாஞ்சேரி அருகே விபத்தில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
கூடுவாஞ்சேரி சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் பத்ம நாபன் (வயது 72). ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர்.
இவர் அதே பகுதியில் காலை சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியே வந்த கார் திடீரென பத்மநாபன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பத்மநாபன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விபத்து ஏற்படுத்திய காரின் விபரம் தெரிய வில்லை. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்து வருகின்றனர்.