செய்திகள்

அறிவுரை கூறியதால் பாட்டியை கட்டையால் தாக்கி கொன்ற பேரன்

Published On 2019-05-09 16:43 GMT   |   Update On 2019-05-09 16:43 GMT
அறிவுரை கூறியதால் ஆத்திரமடைந்த வாலிபர் தனது பாட்டியை விறகு கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடமதுரை:

திண்டுக்கல் அருகே உள்ள சிங்காரக்கோட்டை எஸ்.குரும்பபட்டியைச் சேர்ந்தவர் காளையன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 75). இவர்களது மகன் சந்திரசேகரன். விவசாய தோட்டம் வைத்து பராமரித்து வந்தனர். சந்திரசேகரனின் மகன் சுதாகரன் (22) 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார்.

அடிக்கடி வீட்டில் செலவுக்கு பணம் வாங்கி சுற்றி வந்துள்ளார். இதனை அவரது பாட்டி சரஸ்வதி கண்டித்துள்ளார். இதனால் சரஸ்வதிக்கும் அவரது பேரன் சுதாகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்குமாறு தனது பேரனுக்கு சரஸ்வதி அறிவுரை கூறி வந்தார். இது சுதாகரனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

நேற்று வழக்கம் போல் வீட்டுக்கு வந்த சுதாகரனை சரஸ்வதி சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுதாகரன் விறகு கட்டையால் அவரை சரமாரியாக தாக்கினார். வலி தாங்க முடியாமல் சரஸ்வதி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News