செய்திகள் (Tamil News)

மயிலாடுதுறை அருகே 10-ம் வகுப்பு மாணவன் அரசு பஸ் மோதி பலி

Published On 2019-04-29 12:54 GMT   |   Update On 2019-04-29 12:54 GMT
தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 10-ம் வகுப்பு மாணவன் அரசு பஸ் மோதி பலி மயிலாடுதுறை அருகே பரிதாபம்

மயிலாடுதுறை:

தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 10-ம் வகுப்பு மாணவன் விபத்தில் பலியான சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு அக்களூர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் சக்திவேல் (வயது 15). இவர், மயிலாடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சக்திவேலும் அவருடைய நண்பர் பிரித்திவிராஜும் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மயிலாடுதுறை அருகே திருவாரூர் மெயின்ரோடு பேச்சாவடி பகுதியில் வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் திடீரென சக்திவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இந்த விபத்தில் சக்திவேல், பிரித்திவிராஜ் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சக்திவேலை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். காயமடைந்த பிரித்திவிராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சக்திவேலின் தாய் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சத்திவேல் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளதால் இன்று (திங்கட்கிழமை) தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர் விபத்தில் பலியானது அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

Similar News