செய்திகள்
கோவை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
கோவை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை பேரூர் அருகே உள்ள காலாம்பாளையம் டாஸ்மாக் கடை அருகே சில மர்மநபர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பேரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பச்சாபாளையத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 31), தீத்திபாளையத்தை சேர்ந்த சுஜித்குமார் (30) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, ரூ. 1,200 பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.