செய்திகள்

தேனி அருகே கிணற்றில் தவறி விழுந்து காவலாளி பலி

Published On 2019-04-27 11:21 GMT   |   Update On 2019-04-27 11:21 GMT
தேனி அருகே கிணற்றில் தவறி விழுந்து காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே உத்தமபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தென்னை, வாழை, மானாவாரி பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

தற்போது வறட்சி அதிகரித்து வருவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வன விலங்குகள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுகின்றன. குறிப்பாக காட்டுப்பன்றி அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க தோட்ட காவலுக்கு சென்று வருகின்றனர். உத்தமபாளையம் அம்மாபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் குமரன் (வயது 43). இவர் சூரியன், கார்த்திக், ரவி ஆகியோருடன் தனியார் தென்னந்தோப்பில் காவல் பணிக்கு சென்றுள்ளார்.

தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டு இருந்த போது காட்டுப்பன்றி ஆவேசமாக சீறிப் பாய்ந்து வந்தது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்த 4 பேரும் உயிரை காப்பாற்றிக் கொள்ள சிதறி ஓடினர். இருந்த போதும் காட்டுப்பன்றி அவர்களை விரட்டியது. இதில் குமரன் அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். தண்ணீர் இல்லாததால் குமரனுக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே மற்றவர்கள் அவரை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே குமரன் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News