திண்டுக்கல் அருகே பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை- உறவினர்கள் மறியல்
வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள மோர்பட்டி ஊராட்சி ஜி.குரும்பபட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது 12 வயது மகள் 7-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் நேற்று சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தார். அவரது தாய் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்தார்.
அப்போது சிறுமி வாயில் மின் வயரை கடித்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் கீறல்களும், ரத்த காயமும் இருந்தது.
இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரது வீட்டுக்கு அருகே உள்ள 3 சிறுவர்களே இதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து அறிந்ததும் நகர் வடக்கு போலீசார் அங்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனை முடிவு வெளிவந்த பிறகு சிறுமி கொலை செய்யப்பட்டாரா? என்றும் அதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மறியல் முடிவுக்கு வந்தது.