செய்திகள்

குடிகார கணவரை மிரட்டுவதற்கு தற்கொலை நாடகமாடிய பெண் உடலில் தீப்பிடித்தது

Published On 2019-04-17 12:46 IST   |   Update On 2019-04-17 12:46:00 IST
குடிகார கணவரை மிரட்டுவதற்கு தற்கொலை நாடகமாடிய பெண் உடலில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை செஞ்சுலட்சுமி நகரை சேர்ந்தவர் வேலு. கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மோகனா (32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வேலுவுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனை மனைவி கண்டித்தும் கேட்கவில்லை.

இதையடுத்து கணவரை திருத்துவதற்காக தற்கொலை மிரட்டல் நாடகமாட மோகனா திட்டமிட்டார். நேற்று மாலையில் கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது மோகனா உடலில் மண்எண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்யப் போவதாக கணவரை மிரட்டினார்.

தீக்குச்சியை பற்ற வைத்த போது திடீரென மோகனாவின் உடலில் தீப்பிடித்தது. இதனால் அவர் அலறி துடித்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வேலு மனைவியை காப்பாற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு மோகனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News