புதுக்கோட்டை அருகே வாலிபர் தற்கொலை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அடுத்து உள்ள புதுக்குளத்தின் அருகே நேற்று மாலை பொது மக்கள் நடந்து சென்றனர். அப்போது குளத்தில் ஒரு வாலிபரின் உடல் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகுமான் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்தது புதுக்கோட்டை காமராஜபுரம் 14-ம் வீதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கணேசன் (22) என்றும், புதுக்கோட்டையில் உள்ள தனியார் கியாஸ் ஏஜென்சியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் காதல் விவகாரத்தில் அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.