செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே புதுப்பெண் அடித்து கொலை?- போலீசார் விசாரணை

Published On 2019-04-10 05:31 GMT   |   Update On 2019-04-10 05:31 GMT
உளுந்தூர்பேட்டை அருகே புதுப்பெண் அடித்து கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உளுந்தூர் பேட்டை:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாடு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 23).தொழிலாளி. இவரது மனைவி பார்வதி(19). இவர்களுக்கு திருமணமாகி 9 மாதம் ஆகிறது. பார்வதி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

கணவன்-மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை பார்வதி தூக்கில் பிணமாக தொங்கினார்.

வீட்டில் இருந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கூவாடு பகுதியை சேர்ந்த ஒருவர் கள்ளக்குறிச்சி உலகங்காத்தான் பகுதியில் உள்ள பார்வதியின் அண்ணன் சூர்யாவை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர் பார்வதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சூர்யா தனது உறவினர்களுடன் கூவாடு பகுதிக்கு வந்தார். பிணமாக கிடந்த பார்வதியின் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது பார்வதியின் கழுத்தில் ரத்த காயங்கள் இருப்பதை பார்த்து திடுக்கிட்டார்.

எனவே சூர்யாவுக்கு அவரது தங்கையின் சாவில் சந்தேகம் ஏற்பட்டது.

உடனே உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். அதில் தனது தங்கை பார்வதியின் சாவில் சந்தேகம் உள்ளது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பார்வதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை அடித்து கொலைசெய்து உடலை தூக்கில் தொங்க விட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 9 மாதத்தில் பார்வதி இறந்திருப்பதால் இதுகுறித்து திருக்கோவிலூர் சப்- கலெக்டர் சாருஸ்ரீயும் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News