செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை நடவடிக்கை

Published On 2019-04-09 04:16 GMT   |   Update On 2019-04-09 04:16 GMT
எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். #RameswaramFishermen

ராமேசுவரம்:

ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று 562 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர்.

இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இது சர்வதேச கடல் பகுதி. மீன் பிடிக்க அனுமதி இல்லை. எனவே உங்கள் பகுதிக்கு செல்லுங்கள் என ராமேசுவரம் மீனவர்களை எச்சரித்தனர்.

மேலும் சில கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களை தாக்கியதோடு, மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி விரட்டியடித்தனர். இதையடுத்து மீனவர்கள் அவசரம், அவசரமாக கரைக்கு திரும்பினர்.

அப்போது ராமேசுவரத்தை சேர்ந்த அமலன் என்பவரது படகு எல்லை தாண்டி வந்ததாக கூறி அதில் இருந்த மீனவர்கள் முருகேசன், முனியசாமி, ரெனிஸ்டன், சுப்பையா ஆகிய 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

சிறை பிடிக்கப்பட்ட 4 மீனவர்களும் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு எல்லை தாண்டி வந்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். #RameswaramFishermen

Tags:    

Similar News