பழனி அருகே அட்டகாசம் செய்த ஒற்றை யானை விரட்டியடிப்பு
பழனி:
பழனி பாலாறு- பொருந்தலாறு அருகே உள்ளது புளியம்பட்டி கிராமம். வனப்பகுதி அருகே உள்ள இக்கிராமத்திற்கு அடிக்கடி யானைகள் வருவது வழக்கம். தற்போது பாலாறு - பொருந்தலாறு அணையில் கடும் வெப்பம் காரணமாக அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
இதன் காரணமாக அணைகளில் தண்ணீருக்காக வந்த யானைகள் தற்போது அருகே உள்ள கிராமங்களுக்குள் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஒற்றை யானை ஒன்று புளியம்பட்டி கிராமத்திற்குள் நுழைந்தது. அங்குள்ள விவசாயநிலங்களில் புகுந்து நெல் மற்றும் கரும்பு பயிர்களை நாசம் செய்தது.
இது பற்றி கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை அலுவலர் கணேஷ்ராம் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று யானையை வனத்திற்குள் விரட்டியடித்தனர்.
இது பற்றி வனத்துறை அலுவலர் கணேஷ்ராம் கூறுகையில், கடும் கோடை வெப்பம் காரணமாக உணவுக்காகவும், குடிநீருக்காகவும் வனத்திலிருந்து யானை மற்றும் மிருகங்கள் அடிக்கடி வனத்தையொட்டி உள்ள கிராமபகுதிகளுக்கு வந்து செல்கிறது.
இதனை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.