செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு- நக்கீரன் கோபால் ஏப்ரல் 1ம் தேதி ஆஜராக உத்தரவு

Published On 2019-03-29 08:08 GMT   |   Update On 2019-03-29 08:08 GMT
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி சம்மனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏப்ரல் 1-ம் தேதி நக்கீரன் கோபால் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. #NakkeeranGopal #PollachiAbuseCase
சென்னை:

பொள்ளாச்சியில் ஒரு கும்பல், கல்லூரி மாணவிகளை மிரட்டி கூட்டு பாலியல் தொந்தரவு செய்ததோடு, அதை வைத்து மிரட்டி பணம் பறித்த விவகாரம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் பொதுவெளியில், அவரது  பத்திரிகை மற்றும் இணையதளம் மூலமாக அவதூறான கருத்துக்களை பரப்பி வருவதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பின்னர் சிபிஐக்கு மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை சிபிஐ இந்த வழக்கை ஏற்கவில்லை.



இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், நக்கீரன் கோபால் மற்றும் தேனி கண்ணன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பினர். அதில், மார்ச் 30-ம் தேதி ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து நக்கீரன் கோபால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணை எப்போது சிபிஐக்கு மாற்றப்படும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், வழக்கின் தற்போதைய நிலை குறித்து கூறியதுடன், வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டதாக கூறினார்.

இதையடுத்து, கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக அரசு அறிவித்தபிறகும், சிபிசிஐடி விசாரணை தொடர்வது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், நக்கீரன் கோபால் நாளைக்குப் பதில் ஏப்ரல் 1-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக அனுமதி அளித்தனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக நக்கீரன் கோபால் தெரிவித்தார். #NakkeeranGopal #PollachiAbuseCase
Tags:    

Similar News