துடியலூர் அருகே திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் விபத்தில் பலி
கோவை:
கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை மாசாணியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (28) தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஸ்ரீதேவி (24). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதம் ஆகிறது.
ஸ்ரீதேவி தனியார் நிறுவனத்தில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை கணவன்-மனைவி இருவரும் தங்கள் நிறுவனத்தில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்கள்.பின்னர் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு வந்தனர். பொருட்கள் வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
தெப்பம்பட்டி பிரிவு முருகன் நகரில் ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் ஸ்ரீதேவி சம்பவ இடத்திலே இறந்தார். பிரேம் குமார் காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.