பெட்ரோல் டோக்கன் வினியோகம் - அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
சீர்காழி:
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வினர் சீர்காழியில் பிரசாரம் செய்தனர்.
இந்த நிலையில் சீர்காழியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கட்சி கொடிகளுடன் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தங்களது இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தேர்தல் பறக்கும்படை மண்டல துணை தாசில்தார் சுவாமிநாதன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஆய்வு நடத்தினர்.
இதில்அ.தி.மு.க. நகர செயலாளர் பக்கிரிசாமி பெயர் ரப்பர் ஸ்டாம்பு மூலம் அச்சிட்ட டோக்கன் கொடுத்து ரூ.100க்கு பெட்ரோல் நிரப்பியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் கையில் வைத்திருந்த 100 டோக்கன்களையும், ரூ.10 ஆயிரத்து 870-ஐயும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்பேரில் போலீசார் அ.தி.மு.க. நகர செயலாளர் பக்கிரிசாமி, பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர்கள் தங்கராசு, தினேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #ADMK