நிலக்கோட்டை அருகே பஸ்சில் பயணியிடம் ரூ.95 ஆயிரம் பறிமுதல்
நிலக்கோட்டை:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் பண பட்டுவாடாவை தடுக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களிலும் சோதனை நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் பயணிகளிடம் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று ஆத்தூர் அருகே மல்லையாபுரத்தை சேர்ந்த கோபால் (வயது53) என்பவர் மதுரைக்கு செல்லும் அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். தனியார் லாரி அலுவலகத்தில் பணிபுரியும் இவரிடம் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ஆவணங்கள் இன்றி ரூ.95 ஆயிரத்து 500 பணம் இருந்தது தெரிய வந்தது.
அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் நிலக்கோட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். கடந்த வாரம் அடமானம் வைத்த தனது மனைவியின் நகையை மீட்பதற்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக கூறினார்.
ஆனால் அதிகாரிகள் அதனை ஏற்க வில்லை. துணை தாசில்தார் ருக்மணி பணத்தை பறிமுதல் செய்து ஆவணங்களை காட்டி பின்னர் பெற்றுச் செல்லுமாறு அனுப்பி வைத்தார்.