செய்திகள்

திருப்பத்தூர் அருகே குழந்தைக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை

Published On 2019-03-20 11:30 GMT   |   Update On 2019-03-20 11:30 GMT
திருப்பத்தூர் அருகே குழந்தைக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் கோணாப்பட்டை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 39). இவரது மனைவி நீலா (33). இந்த தம்பதிக்கு பவதாரணி (5). என்ற மகள் இருந்தார்.

உதயகுமார் பெங்களூருவில் சில ஆண்டாக கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் வீட்டிற்கு வந்த உதயகுமார் மீண்டும் வேலைக்கு செல்லாமல் ஊரைச் சுற்றி வந்தார். இதனால் தம்பதியடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனிடையே உதயகுமார் தான் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கிறேன் அதற்கு ரூ. 5 லட்சம் தேவைப்படுகிறது என நீலாவிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பிய நீலா தனது பெயரில் இருந்த நிலத்தை அடகு வைத்தும் வட்டிக்கு வாங்கியும் ரூ.5 லட்சம் பணத்தை கணவரிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட உதயகுமார் வெளிநாடு செல்வதாக கூறி பெங்களூருவுக்கு சென்று தங்கி விட்டார்.

பெங்களூருவில் இருந்து உதயகுமார் தான் நல்ல வேலையில் இருப்பதாகவும் நல்ல சம்பவம் கிடைக்கிறது என்று கூறி அவ்வபோது நீலாவிடம் போன் செய்து பேசியுள்ளார். இனியும் கஷ்டபட தேவையில்லை என்று நிலா எண்ணி வந்தார்.

இந்நிலையில் கணவர் வெளிநாடு செல்லவில்லை பெங்களூருவில் தான் உள்ளார் என்பது நீலாவிற்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நீலா தனது கணவரிடம் இது குறித்து கேட்டார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நீலா நேற்று முன்தினம் தனது குழந்தைக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தானும் வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதை கண்ட உறவினர்கள் 2 பேரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பவதாரணி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நீலாவிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு நீலா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News