செய்திகள்

காட்பாடி அருகே மின்சாரம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் திடீர் மறியல்

Published On 2019-03-11 11:39 GMT   |   Update On 2019-03-11 11:39 GMT
காட்பாடி அருகே மின்சாரம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூர்:

திருவலம் அடுத்த சேர்க்காடு கூட்ரோட்டில் மின்பகிர்மான அலுவலகம் உள்ளது. இந்த மின்பகிர்மான அலுவலகத்தில் இருந்து மின்மாற்றிகள் மூலம் சேர்க்காடு, விண்ணம்பள்ளி, மகிமண்டலம், மிட்டூர் உட்பட 14 கிராமங்களில் மின்விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மின்சாரம் சரிவர வழங்கவில்லை. இதனால் விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன.

மேலும் பள்ளிகளில் தேர்வு நடந்துவரும் வேளையில் மின்சாரம் இல்லாமல் இரவில் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் இரவில் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் புழுக்கம் காரணமாக கடும் அவதியடைந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சேர்க்காடு மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை 10 மணியளவில் மின்வாரிய அலுவலகத்திற்கு எதிரே உள்ள சென்னை - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த காட்பாடி இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார் பொதுமக்களிடம் சம்பந்தப்பட்ட அலவலகத்திற்கு சென்று முறையிடுங்கள் என தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் மற்றும் இன்ஸ்பெக்டரும் சென்று மின்வாரிய அலுவலக இளநிலை பொறியாளர் கவிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதனால் இப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews

Tags:    

Similar News