கூடலூர் அருகே முல்லைப்பெரியாற்றில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
கூடலூர்:
நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் முல்லைப்லப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து குறைவாக உள்ளது. தேனி பகுதியில் நீர்வரத்து இன்றி பெரும்பாலான இடங்களில் வறண்டு கிடக்கிறது. இதனை பயன்படுத்தி மர்ம கும்பல் மணல் கடத்ததில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுருளிபட்டி யானை கஜம் பகுதியில் மணல் கடத்தி குவியல்களாக வைத்திருப்பதை பார்த்த விவசாயிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த நிலை தொடர்ந்தால் கம்பம், கூடலூர் பகுதியில் கடும் வறட்சி ஏற்படும் என்பதால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் தெற்கு இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் குள்ளப்பகவுண்டன்பட்டி ஒத்தகளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்திசோனையிட்டபோது சுருளியாறு மின் நிலையம் செல்லும் சாலையில் முல்லைப்பெரியாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக ராமர் (வயது40) என்பவரை கைது செய்து மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.