வளசரவாக்கத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 மாணவர்கள் கைது
போரூர்:
நெற்குன்றத்தை சேர்ந்தவர் நாகநாதன் இவர் கடந்த 6-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளை வளசரவாக்கம் ஜானகி நகரில் உள்ள கடை முன்பு நிறுத்திவிட்டு காலையில் எடுக்க வந்தபோது காணவில்லை.
அதை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அமுதா அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.
அதிகாலையில் வந்த 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது பதிவாகி இருந்தது. அவர்களை பிடிக்க தீவிரமாக தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று ஆழ்வார்திருநகர் தனியார் வணிக வளாகம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் கெருகம்பாக்கம் லீலாவதி 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த விமல் ராஜ் அதே பகுதியைச் சேர்ந்த 18-வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பது தெரிய வந்தது. விமல்ராஜ் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டும் சிறுவன் முதலாமாண்டும் படித்து வருகிறார்கள். இருவரும் நாகநாதன் பைக்கை திருடி சென்றதை ஒப்புக் கொண்டனர்.
வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு கடைகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் விலை உயர்ந்த சொகுசு மோட்டார் சைக்கிளை மட்டும் குறிவைத்து திருடி வந்ததும் தெரியவந்தது. உடனடியாக 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே வேளச்சேரி காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு உள்ளது.