தாகூர் கலைக்கல்லூரியில் கோஷ்டி மோதல்- 21 மாணவர்கள் மீது வழக்கு
புதுச்சேரி:
லாஸ்பேட்டை தாகூர் அரசு கலைகல்லூரியில் நேற்று 2 பிரிவு மாணவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனர். இந்த மோதலில் பேராசிரியர் சம்பத்குமார் மற்றும் ஒரு மாணவர் காயம் அடைந்தனர்.
தொடர்ந்து கல்லூரி வளாகத்துக்குள்ளேயே மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு வந்ததால் தங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என கூறி கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கல்லூரி முதல்வர் இளங்கோ சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பேராசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
பின்னர் இந்த மோதல் குறித்து கல்லூரி முதல்வர் இளங்கோ லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் அத்துமீறி கல்லூரிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துதல், அரசு சொத்துக்கு சேதம் விளைவித்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் மிரட்டியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் 21 மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்தனர். மேலும் 2 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.