குரு மகன் கனலரசனுக்கு அனைத்து உதவியும் செய்ய தயார்- டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
மறைந்த குருவின் மூத்த சகோதரி செல்வியின் கணவரும், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான கருணாகரன் நேற்று தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் என்னை சந்தித்துப் பேசினார். அப்போது குரு குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகள் குறித்து நிறைய விசயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
குருவின் பெருமைக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவரது மற்றொரு சகோதரியின் கணவர் அன்பழகனும், அவரது குடும்பத்தினரும் மற்றவர்களும் செயல்படுவதை எண்ணி தாம் மிகுந்த வருத்த மடைவதாக என்னிடம் கூறினார்.
குருவின் மகன் கனலரசனை சிலர் சீரழித்து விட்டதாகவும், தமக்கு எதிராக பின்னப்படும் சதி வலையை அவனே உணர்ந்து திருந்தாவிட்டால், அவனை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் அவர் வேதனைப்பட்டார். தவறுகளை உணர்ந்து திருந்தி வந்தால் அவனது கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கனலரசன் திருந்தி வந்தால் அவனது கல்வி மற்றும் எதிர்காலத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்ய நானும், அன்புமணி ராமதாசும் காத்திருப்பதாகவும் கருணாகரனிடம் உறுதியளித்தேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.