செய்திகள்

தனியார் பால் நிறுவனங்களை கலெக்டர்கள் ஆய்வு செய்யவேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-03-01 23:34 GMT   |   Update On 2019-03-01 23:34 GMT
பால் மற்றும் பால் பொருட் களில் தனியார் பால் நிறுவனங்கள் கலப்படம் செய்கிறதா? என்பதை 2 மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆய்வு செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Chennaihighcourt
சென்னை:

தனியார் பால் நிறுவனங்கள் சில கலப்பட பாலை விற்பனை செய்வதாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து ஊடகங்களுக்கும் அவர் பேட்டி அளித்தார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக அமைச்சரே குற்றம் சாட்டியுள்ளதால், இந்த கலப்படம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பால் மற்றும் பால் பொருட்களில் செய்யப்படும் கலப்படம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.



இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் உள்ளதா? என்று ஆய்வு மேற்கொண்டது குறித்து அறிக்கையை தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதை படித்து பார்த்த நீதிபதிகள், ‘பால் கலப்படம் தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் 2 மாதத்துக்கு ஒரு முறை பால் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு கலப்படம் தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை ஆணையருக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கலப்படத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும், ‘பால் கலப்படத்தை தடுக்க பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்க வேண்டும். அப்போதுதான் இதுதொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இன்னும் அதிகரிக்கும்’ என்று கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். #
Tags:    

Similar News