செய்திகள்

வேடசந்தூர் திமுக பிரமுகர் கொலை- குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

Published On 2019-02-28 14:13 GMT   |   Update On 2019-02-28 14:13 GMT
வேடசந்தூர் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கெண்டையகவுண்டனூரைச் சேர்ந்தவர் சவடமுத்து (வயது 45). இவருக்கு பூங்கொடி, லெட்சுமி ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

சவடமுத்து தி.மு.க. கிளை பிரதிநிதியாக இருந்து வந்தார். சொந்தமாக வேன், லாரிகள் வைத்து ஓட்டி வந்தார். கடந்த வாரம் தனது அலுவலகத்தில் தூங்கிக் கொண்டு இருந்த சவடமுத்துவை மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரது உடலை மீட்டு விசாரித்து வந்தனர். நகை, பணத்துக்காக இந்த கொலை நடந்ததா? என விசாரணை நடத்தப்பட்டது. ஏனெனில் சவடமுத்து கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் மாயமாகி இருந்தது.

அதன் பிறகு அலுவலகத்தில் சோதனை நடத்திய போது அந்த நகையை அவர் அடகு வைத்திருந்தது தெரிய வந்தது. எனவே இந்த கொலை வேறு காரணங்களுக்காக நடந்திருக்கலாம் என போலீசார் தீர்மானித்தனர்.

சவடமுத்துவுக்கு வேறு பெண்கள் யாருடனாவது தொடர்பு இருந்ததா? என விசாரணை நடத்தப்பட்டது. அவரது செல்போனில் அதிக முறை யாரிடம் பேசினார்? கொலை செய்யப்பட்டதற்கு முன்பாக அவருக்கு ஏதேனும் அழைப்புகள் வந்ததா? என விசாரணை நடத்தப்பட்டது.

ஆனால் அதில் எவ்வித தடயமும் சிக்க வில்லை. இதனால் கொலையாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Tags:    

Similar News