செய்திகள்

முத்துப்பேட்டை அருகே நூதன முறையில் விவசாயிடம் ரூ.1¼ லட்சம் கொள்ளை

Published On 2019-02-22 17:29 GMT   |   Update On 2019-02-22 17:29 GMT
முத்துப்பேட்டை அருகே வங்கி முன்பு நூதன முறையில் விவசாயிடம் ரூ.1¼ லட்சம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே பெத்தவேலன் கோட்டகம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 48). விவசாயி.

இவர் நேற்று மதியம் முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றார். அங்கு தனது 8 பவுன் தங்க நகையை அடமானமாக வைத்து ரூ.1லட்சத்து 24 ஆயிரத்து 500-ஐ பெற்றுக்கொண்டார்.

பின்னர் அந்த பணத்தை ஒரு பையில் போட்டு வங்கி முன்பு நிறுத்தியிருந்த தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்தார்.

அப்போது அங்கு நின்றிருந்த 2 வாலிபர்கள் சந்திரமோகனிடம், கீழே கிடந்த 10, 20ரூபாய்களை காட்டி உங்களது பணமா? என்று பாருங்கள் என்றனர்.

இதை நம்பிய சந்திரமோகன் தனது பணம் தான் என்று நினைத்து பணத்தை எடுத்து கொண்டார். அந்த சமயத்தை பயன்படுத்தி 2 வாலிபர்களும், ரூ.1¼ லட்சம் பணப்பையை நைசாக எடுத்து கொண்டனர். பிறகு அந்த வாலிபர்கள் அங்கிருந்து நழுவி சென்று விட்டனர்.

இதையடுத்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட சந்திரமோகன், பணப்பையை காணாதது கண்டு திடுக்கிட்டார். 2 வாலிபர்களும், நூதன முறையில் தன்னை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்தது அவருக்கு தெரியவந்தது.

இது குறித்து அவர் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துப்பேட்டை நகரில் உள்ள பெரும்பாலான கண்காணிப்பு கேமிராக்கள் செயல்படுவது இல்லை. இதை பயன்படுத்தி தான் தற்போது முத்துப்பேட்டை பகுதியில் தொடர் கொள்ளை நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News