செய்திகள்

ஊழலில் திமுகவும் காங்கிரசும் சமம் - பாஜக தலைவர் அமித்ஷா பேச்சு

Published On 2019-02-22 10:05 GMT   |   Update On 2019-02-22 10:05 GMT
புல்வாமாவில் இந்திய வீரர்கள் சிந்திய ரத்தம் வீணாகப் போகாது. ஊழலில் திமுகவும் காங்கிரசும் சமம் என ராமநாதபுரத்தில் இன்று பேசிய பாஜக தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். #ParliamentElection #BJP #AmitShah
ராமநாதபுரம்:

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, அமித் ஷா இன்று ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்தார். முன்னர் மதுரை வந்த அமித் ஷாவை விமான நிலையத்தில்  துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வரவேற்றார்.

இதைத்தொடர்ந்து, ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானில் பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் சார்பாக, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், சிவசந்திரன் என்ற 2 வீரர்கள் தங்களது இன்னுயிரை இழந்திருக்கிறார்கள்.



பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பயங்கரவாதத்திற்கு எள்முனை அளவு கூட இடம் அளிக்காது. புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.

பல்வேறு சிறந்த தலைவர்களை இந்தியாவிற்கு கொடுத்த பூமி தமிழகம். நாடாளுமன்ற தேர்தல் யுத்தத்திற்காக இங்கே நாம் ஒன்றுபட்டிருக்கிறோம். தமிழகத்தில் பாஜக கூட்டணி சார்பில் 35-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என நம்புகிறேன்.

தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வலிமையாக பாஜக கூட்டணி போட்டியிடுகின்றன. ஊழலைப் பொருத்தமட்டில் திமுகவும் காங்கிரசும் சமம். நல்லாட்சியை பொருத்தமட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியும், பாஜகவும் சமம். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். 

இந்த கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். #ParliamentElection #BJP #AmitShah
Tags:    

Similar News