செய்திகள்

திண்டுக்கல் அருகே கீழே தள்ளி ஆசிரியர் கொலை

Published On 2019-02-21 10:49 GMT   |   Update On 2019-02-21 10:49 GMT
திண்டுக்கல் அருகே பஞ்சம்பட்டியில் ஓய்வு பெற்ற ஆசிரியரை கீழே தள்ளி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சின்னாளப்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள பஞ்சம்பட்டி செபஸ்தியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜான் யாகப்பராஜ் (வயது 70). இவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகன்கள் திருமணமாகி வெளி நாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.

சம்பவத்தன்று என்.பஞ்சம்பட்டியைச் சேர்ந்த சுறா பாஸ்கர் (27) என்பவர் குடிபோதையில் அதே பகுதியில் தகாத வார்த்தைகளால் பேசி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.

அப்போது அவ்வழியே சென்ற ஜான்யாகப்பராஜ் அவர் சத்தம் போடுவதை தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு சுறா பாஸ்கர் அவரையும் தகாத வார்த்தைகளால் பேசி கீழே தள்ளியுள்ளார்.

நிலை தடுமாறி கீழே விழுந்த ஆசிரியர் ஜான் யாகப்பராஜ் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அறிந்த சின்னாளப்பட்டி போலீசார் விரைந்து சென்று ஆசிரியரை கொலை செய்த வழக்கில் சுறா பாஸ்கரை கைது செய்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News