செய்திகள்

குன்றத்தூர் அருகே டிரைவர் மது போதையில் ஓட்டிய பள்ளி வேன் கவிழ்ந்தது- 15 மாணவர்கள் படுகாயம்

Published On 2019-02-21 10:17 GMT   |   Update On 2019-02-21 10:17 GMT
குன்றத்தூர் அருகே இன்று காலை பள்ளி வேன் கவிழ்ந்து 15 மாணவ- மாணவிகள் படுகாயம் அடைந்தனர். டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பூந்தமல்லி:

குன்றத்தூரில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இன்று காலை குன்றத்தூரை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து மாணவ- மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் வந்தது. சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் வேனில் இருந்தனர்.

தரைப்பாக்கம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் வேனில் இருந்த பெண் பணியாளர் குன்றத்தூரை சேர்ந்த சித்ரா, மற்றும் 15 மாணவ - மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

அப்பகுதி மக்கள் வேனில் சிக்கியவர்களை மீட்டனர். பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பள்ளி வேனை ஒட்டிய டிரைவர் மது போதையில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை மடக்கி பிடித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசில் ஒப்படைத்தனர்.

டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News