செய்திகள்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தமிழ்நாடு கிராம நிர்வாக வீட்டு வாரிய துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக 4 பேரிடம் ரூ.3 லட்சத்து 93 ஆயிரம் மோசடி செய்த ஓசூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:
ஓசூரில் உள்ள ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு எழில்நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் தமிழரசன். இவர் தமிழ்நாடு கிராம நிர்வாக வீட்டு வசதி வாரிய துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக ஓசூர் பகுதியை சேர்ந்த சவுந்திரன், நியாமத்துல்லா, பிரவீன்குமார், ஸ்டெல்லா மற்றும் நந்தினி ஆகியோரிடம் ரூ.3 லட்சத்து 93 ஆயிரம் பணம் பெற்று மோசடி செய்து உள்ளார்.
மேலும் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அரசு அலுவலகத்திற்கு நேர்முக தேர்வுக்கு செல்லும்படி போலியாக தயார் செய்த அரசு முத்திரையிட்ட கடிதத்தையும் தமிழ்நாடு கிராம நிர்வாக வீட்டு வாரிய துறையின் அடையாள அட்டையையும் கொடுத்துள்ளார். இது அனைத்தும் போலி என்றும், மோசடி என்றும் தெரிந்த சவுந்திரன், நியாமத்துல்லா உள்ளிட்டோர் ஓசூர் டவுன் போலீசில் தமிழரசன் மீது புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் தமிழரசனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் அனைவரிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பணம் பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தமிழரசனை கைது செய்தனர்.