செய்திகள்
அம்மாப்பேட்டை அருகே தீயில் கருகிய மூதாட்டி பலி
அம்மாப்பேட்டை அருகே தீயில் கருகிய மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள அரப்ப கந்தசாமி தெருவை சேர்ந்தவர் சுசிலா (வயது 80). இவர் சம்பவத்தன்று காலையில் வீட்டில் உள்ள அடுப்பில் வைத்து பால் காய்ச்சு கொண்டிருந்தார். அப்போது அடுப்பில் இருந்த தீ, அவரது சேலையில் பிடித்துக் கொண்டது. இதனால் தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் பலத்த காயம் அடைந்த சுசிலாவை, அக்கம், பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவசர வார்டில் அனுமதிக்கப்பட்ட சுசிலாவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுசிலா இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.