செய்திகள்

திருப்பத்தூர் அருகே வேன் மரத்தில் மோதி பெண் பலி

Published On 2019-02-19 11:44 GMT   |   Update On 2019-02-19 11:44 GMT
திருப்பத்தூர் அருகே இன்று காலை வேன் மரத்தில் மோதிய விபத்தில் படுகாயமடைந்த பெண் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருப்பத்தூர்:

தூத்துக்குடி மாவட்டம், கட்டலாங்குளம் அருகில் உள்ள கே.புதூரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி வள்ளி (வயது 42).

இவர் உறவினர்கள்17 பேருடன் சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் இன்று நடைபெறும் தெப்பத்திருவிழாவை காண வேனில் புறப்பட்டார்.

இன்று காலை 6 மணியளவில் திருப்பத்தூர் அருகே உள்ள கருப்பூர் மெயின் ரோட்டில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறு மாறாக ஓடி அங்குள்ள புளிய மரத்தில் மோதியது.

இதில் வேனின் மேல் பகுதி தனியாக கழன்று சென்றது. அப்போது டிரைவர் மட்டும் வேனில் இருந்து குதித்து தப்பித்தார்.

இந்த விபத்தில் வேனில் இருந்த வள்ளி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வந்த பெண்கள் உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து திருப் பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News