செய்திகள்
திருவட்டார் அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
திருவட்டார் அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவட்டார்:
மார்த்தாண்டம் அருகே உள்ள மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் சுவாமிதாஸ். இவரது மகன் ஸ்டீபன் (வயது 26). வெல்டிங் தொழிலாளி.
இவர் நேற்று திருவட்டார் ஆற்றூர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல்மாடியில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கட்டித்தில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு பலத்த படுகாயம் ஏற்பட்டது. மூக்கு மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் பாய்ந்தது. ஸ்டீபன் கீழே தவறி விழுந்ததை பார்த்த மற்ற தொழிலாளர்கள் அங்கு ஓடி வந்தனர். படுகாயம் அடைந்த அவரை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஸ்டீபன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் சிவசங்கர், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருன்றனர்.