செய்திகள்

மேல்விஷாரம் நகராட்சி ஆபீஸ் அருகே வேலூர் வாலிபர் வெட்டிக் கொலை

Published On 2019-02-13 10:16 GMT   |   Update On 2019-02-13 10:16 GMT
மேல்விஷாரம் நகராட்சி அலுவலகம் அருகே வேலூர் வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

ஆற்காடு:

வேலூர் சைதாப்பேட்டை கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன் மாட்டு வியாபாரி. இவரது மகன் தமிழரசன் (வயது 26). கூலி வேலை செய்து வந்தார். நேற்று இரவு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.

இந்தநிலையில் மேல்விஷாரம் நகராட்சி அலுவலகம் அருகே சர்வீஸ் சாலை ஓரத்தில் வெட்டு காயங்களுடன் தமிழரசன் இறந்துகிடந்தார். அருகே பீர் பாட்டில்கள் கிடந்தன.

டி.எஸ்.பி. கலைச்செல்வன் மற்றும் ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். தமிழரசன் தலை, மார்பு, கழுத்து என பல்வேறு இடங்களில் வெட்டி கொலை செய்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அவரை வெட்டியுள்ளனர். தப்பிக்க ஓடியதால் விரட்டி வெட்டியுள்ளனர். இதனால் சாலை தடுப்புகள் மற்றும் பல இடங்களில் ரத்தம் கறை படிந்துள்ளது.

போலீசார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழசரன் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து சுருட்டுக்கார தெருவை சேர்ந்த பிரபாகரன் என்பவரை தலையில் கல்லை போட்டு சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்தனர். இது சம்பந்தமாக வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை மற்றும் 2 அடி-தடி வழக்குகள் உள்ளன.

முன்விரோத தகராறில் அவர் கொல்லப்பட்டாரா? அல்லது நண்பர்களுடன் மது அருந்தும்போது குடிபோதையில் தகராறு ஏற்பட்டு வெட்டி சாய்க்கப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது நண்பர்கள் யார் என்பது குறித்து முதற்கட்டமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை நடந்த இடத்தில் மோப்பநாய் ஷிம்பா கொண்டு போலீசார் சோதனையிட்டனர். அங்கிருந்து சென்னை நோக்கி தனியார் ஆஸ்பத்திரி மற்றும் எம்.ஜி.ஆர். நகர் வரை சிறிது தூரம் ஓடி சென்றது.

இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News