பொன்னேரி பகுதியில் கட்டுமான பணிக்கு வைத்திருந்த மணல் கடத்தல்
பொன்னேரி:
பொன்னேரி மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் தற்போது ஏராளமான புதிய கட்டிடங்கள் கட்டுமான பணி நடந்து வருகின்றன. கட்டுமானத்திற்கு தேவையான மணலை உரிமையாளர்கள் வீடுகள் முன்பு குவித்து வைத்திருப்பது வழக்கம்.
இந்த மணலை நள்ளிரவில் வரும் மர்ம கும்பல் லாரியில் அடிக்கடி கடத்தி சென்றனர். மணல் கொள்ளை போனதால் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பொன்னேரியை அடுத்த வேன்பாக்கம் திருவொற்றியூர் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டு இருந்த மணலை மர்ம கும்பல் மினிலாரியில் கடத்தினர்.
சிறிது தூரம் லாரி சென்ற போது சாலையோர பள்ளத்தில் டயர் சிக்கிக் கொண்டது. இதனால் லாரியை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே லாரியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். உடனே மணல் கடத்தல் கும்பல் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து கட்டிட உரிமையாளர் கஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.