செய்திகள்

செந்துறை அருகே நிவாரணம் வழங்க கோரி வயலில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்

Published On 2019-02-08 14:55 GMT   |   Update On 2019-02-08 14:55 GMT
செந்துறை அருகே தண்ணீரின்றி கருகிய நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க கோரி வயலில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது ராயம்புரம் பெரிய ஏரி. இந்த ஏரியில் தற்போது தண்ணீர் இல்லை. இந்த ஏரி தண்ணீரை நம்பி விவசாயம் செய்த 300 ஏக்கர் நெல் சாகுபடி முற்றிலும் பாதிப்படையும் தருவாயில் உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அச்சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தமிழக அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ராயம்புரம் பெரிய ஏரியானது 364 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டில் உள்ளதாகும். தமிழக அரசு விவசாயிகளுக்கு வண்டல்மண் எடுப்பதற்கு கடுமையான கட்டுப்பாடு விதித்ததால் போதிய அளவு விவசாயிகள் மண் எடுக்க முடியவில்லை. பாசன ஏரிகள் தூர்வாரப் படவில்லை.  
364 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை உடனடியாக தூர்வாரவேண்டும்.

பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு அதற்கான இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நெல் வயல்களில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரியலூர் செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த அரியலூர் தாசில்தார் கதிரவன் உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Tags:    

Similar News