திருப்பத்தூர் அருகே வாகனத்தை சுத்தம் செய்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து பலி
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சோலுடையான்பட்டியைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் (வயது25). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். அதன் பின்னர் சொந்தமாக ஜே.சி.பி. எந்திரம் வாங்கி ஓட்டி வந்தார்.
மருதுபாண்டியன் தனது நண்பர்களான சக்தி (வயது18), ரவி (24) ஆகியோருடன் திருக்கோஷ்டியூர் சென்று அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றினார்.
அதன் பின்னர் ஜே.சி.பி. வாகனத்தை அங்குள்ள வாட்டர் சர்வீஸ் நிறுவனத்துக்கு கொண்டு சென்றார். அங்கு வாகனத்தை அவரே சுத்தம் செய்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. மயங்கி விழுந்த அவரை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மருதுபாண்டியனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.